கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள்.
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள்.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Published on

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக் குழுத் தலைவர் அம்சா ராஜன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பயாஸ் அகமத் தீர்மானத்தை வாசித்தார்.

இக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால், சுங்கச்சாவடியினை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாட்டிலேயே அதிகமாக மா விளைச்சல் உள்ளதால், அரசு சார்பில் மாங்கனி அரவை தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

கிருஷ்ணகிரியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் அதிகமான காய்கறிகள் விளைவதாலும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களின் அன்றாட காய்கறி தேவையைபூர்த்தி செய்வதாலும், காய்கறி பதப்படுத்தும் தொழிற்சாலையை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in