Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM

திருச்சியில் வஉசி பேரவையினர் ஆர்ப்பாட்டம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸ் தடியடி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை விரட்டியடிக்கும் போலீஸார்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

7 சாதி உட்பிரிவுகளை ஒருங் கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க பரிந்துரை செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய வஉசி பேரவை (அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, பேரவை யின் மாநிலத் தலைவர் மு.லட்சு மணன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, இளைஞர்கள் சிலர் திடீரென ராக்கின்ஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து போகாமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை அப்புறப் படுத்த முயன்றபோது, கடும் தள்ளுமுள்ளு நேரிட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தினர். சிலரை பிடித்து, போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது, வேனில் இருந்து போலீஸாரை நோக்கி மதுபான பாட்டில் வீசப்பட்டதில் பெண் காவலர் காயமடைந்தார்.

தொடர்ந்து, 70 பேரை போலீஸார் கைது செய்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப் பட்ட ஒலிப்பெருக்கி மற்றும் வஉசி பேரவையினர் வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x