Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

மறியலுக்கு முன்னதாக திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்ற இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். (அடுத்தபடம்) வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, கூடலூரை அடுத்த எருமாடு பகுதியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

திருப்பூர் / உதகை

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 216 பேர் கைது செய்யப் பட்டனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருப்பூர் டவுன்ஹால் அருகே கூடிய இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், பேரணியாக சென்று கோட்டாட்சியரை முற்றுகையிட முயன்றனர்.

வடக்கு காவல் நிலைய போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், குமரன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர்கள் ரவி (இந்திய கம்யூனிஸ்ட்), செ.முத்துகண்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் தலைமை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வடக்கு காவல் நிலைய போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், மறியலில் ஈடுபட்டவர்களில் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கூடலூரில்...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே எருமாடு பகுதியிலுள்ள கனரா வங்கி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு இடை கமிட்டி செயலாளர் கே.ராஜன்தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் ஏ.யோகன்னான் உட்பட பலர் பங்கேற்றனர்.

மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x