Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

தகவல் முறையாக கிடைக்காததால் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வில் மீண்டும் பங்கேற்க வாய்ப்பு தர வேண்டும் முதல்வரிடம் அரசு பள்ளி மாணவி மனு

சிவகங்கை

சிவகங்கைக்கு நேற்று வந்த முதல்வர் கே.பழனிசாமியிடம், திருப்புவனம் அருகே குருந்தங்குளத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ச.கவுசல்யா கோரிக்கை மனு அளித்தார்.

அதில், மருத்துவக் கல்வி சேர்க்கையில் பொதுப்பட்டியலில் 145-வது தர வரிசையிலும், இனச்சுழற்சியில் (பிசி) 46 தர வரிசையிலும் உள்ளேன். மருத்துவச் சேர்க்கை கலந்தாய்வுக்கான தகவல் முறையாகக் கிடைக்காததால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. கூலித் தொழிலாளியின் மகளான எனக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

அதேபோல், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மையம் சார்பில் மாநில துணைத் தலைவர் பாண்டி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 19.2.2016-ல் சட்டப் பேரவை கூட்டத் தொடரில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கூறி உள்ளனர்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கே.பெத்தானேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் மு.ராமேஸ்வரி அளித்த கோரிக்கை மனுவில், மழை, வெள்ளக்காலங்களில் வைகை ஆற்றைக் கடந்து செல்ல வழியில்லை. எனவே லாடனேந்தல்-கே.பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம் அமைத்துத்தர வேண்டும் எனக் கோரி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x