Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

தூத்துக்குடியில் 8 மாதங்களுக்கு பிறகு காணொலி மூலம் குறைதீர் கூட்டம் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து புகார்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடைசியாக கடந்த பிப்ரவரி27-ம் தேதி விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு கரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக இக்கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 12 வட்டார வேளாண்மை அலுவலகங்களில் இருந்தவாறு விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 662 மி.மீ., ஆகும். ஆனால் இந்தஆண்டு இதுவரை 40 சதவீதம் குறைவாக 395 மி.மீ., தான் பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் இயல்பை விட 38 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஓரளவுக்கு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. அணைகளிலும் 80 சதவீதம் அளவுக்கு நீர்இருப்பு உள்ளது. எனவே பாசனத்துக்கு பிரச்சினை ஏற்படாது என நம்புகிறோம்.

பயிர் காப்பீடு

விவசாயிகளுக்கு தேவையானஉரங்கள் போதுமான அளவில்கையிருப்பில் உள்ளன. விவசாயிகள் அனைவரும் கட்டாயம் பயிர்காப்பீடு செய்ய வேண்டும். குறிப்பாக படைப்புழு தாக்குதல் இருப்பதால் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இது தொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து தூத்துக்குடி வட்டாரவேளாண்மை அலுவலகத்தில் இருந்து பேசிய விவசாயி ஈஸ்வரமூர்த்தி, ‘‘வடகிழக்கு பருவமழை தாமதம் காரணமாக பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அவகாசம் வழங்க வேண்டும். மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் இருப்பதால் மருந்துஅடிக்க வேளாண்மைத் துறையினர் உதவி செய்ய வேண்டும்’’ எனவலியுறுத்தினார்.

இதேபோல் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி,விளாத்திகுளம், புதூர் பகுதி விவசாயிகளும் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், முதலில் பயிரிடப்பட்டு 40 நாட்களுக்கு மேல் வளர்ச்சியடைந்த பயிர்களில் தாக்குதல் இல்லை. மருந்து அடிக்கப்பட்டபயிர்களில் படைப்புழுத் தாக்குதல்கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருந்துதெளிக்காத பயிர்களில் தான்தாக்குதல் காணப்படுகிறது.இதனை வயல் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளோம்.

மருந்து தெளிக்க மானியம்

எனவே, விவசாயிகள் அனைவரும் வேளாண்மைத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை வாங்கி தெளிக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போல இந்தஆண்டு வேளாண்மைத் துறையேமருந்து அடிக்கும் திட்டம் ஏதும்இல்லை. விவசாயிகளே மருந்தை வாங்கி தெளித்து விட்டு அதற்கான ரசீதை வட்டார வேளாண்மை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் 50 சதவீத மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x