தூத்துக்குடி அருகே ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கிய சம்பவம் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா? இலங்கையைச் சேர்ந்த 6 பேரிடம் உளவுத்துறை தீவிர விசாரணை

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் பிடிப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 6 பேருடன் கடலோர காவல் படையினர் மற்றும் மத்திய, மாநில உளவுத் துறையினர்.
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் பிடிப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 6 பேருடன் கடலோர காவல் படையினர் மற்றும் மத்திய, மாநில உளவுத் துறையினர்.
Updated on
1 min read

தூத்துக்குடிக்கு தெற்கே சர்வதேச கடல் எல்லையையொட்டிய இந்திய கடல் பகுதியில் சென்ற இலங்கையைச் சேர்ந்த படகை கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் மடக்கிப் பிடித்தனர். அந்தப் படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின், 20 சிறிய பெட்டிகளில் சிந்தட்டிக் போதைப் பொருட்கள் மற்றும் 5 நவீன துப்பாக்கிகள், சேட்டிலைட் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

படகில் இருந்த இலங்கையைச்சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் படகின் கேப்டன் இலங்கை நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல் (40) மற்றும் வான குலசூரிய ஜீவன் (30), சமீரா (32), வர்ண குலசூர்யா மனுவேல் ஜீவன் பிரசன்னா (29), நிசாந் கமகே (46), லட்சுமணகுமார் (37) என்பது தெரியவந்தது.

போதைப் பொருட்களை பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து பாய்மரப் படகு மூலம் கடத்தி வந்து, நடுக்கடலில் வைத்துபடகுக்கு மாற்றியதும், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அவற்றை கடத்திச்செல்ல திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து படகுடன் 6 பேரையும் கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் வைபவ் மூலம்தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு நேற்று காலை 7.30 மணியளவில் அழைத்து வந்தனர். கப்பலில் வைத்து அவர்களிடம் கடலோர காவல் படை ஐஜி புருஷோத்தமன், டிஐஜி ஆனந்த் சர்மா, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு டிஐஜி புருனே, ஆய்வாளர் பரிமளா, கியூ பிரிவு டிஎஸ்பி சந்திரகுமார், ஆய்வாளர் அனிதா, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

தீவிரவாதிகளுடன் தொடர்பா?

பின்னர் 6 பேரையும், போதைப் பொருட்களுடன் கடலோர காவல் படையினர் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். 6 பேரையும் அவர்கள்தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 6 பேரும்தூத்துக்குடியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் மதுரைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகில் 5 நவீன துப்பாக்கிகள் இருந்த தாலும், அவை பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டதாலும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in