Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

சிட்லப்பாக்கத்தில் எரிஉலை மூலம் குப்பைகளை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கம் பெரிய ஏரியில் பேரூராட்சி சார்பில் எரிஉலை மூலம் குப்பைகளை எரிக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள பெரிய ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டும் கழிவுநீர் கலக்கப்பட்டும் வந்தது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீராதாரம் கெட்டுப் போனதாகக் கூறி இப்பகுதி பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடி புகார் கூறினர். இதைத் தொடர்ந்து ரூ.25 கோடி மதிப்பீட்டில் அரசு சார்பில் தற்போது இந்த ஏரியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் பெரிய ஏரி பகுதியில் குப்பைகளை மலைபோல் குவித்து, ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் குப்பை எரிஉலை அமைத்து குப்பைகளை எரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏரிக்கரை பகுதியில் குப்பையை கொட்டுவது குறித்து பேரூராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இப்பகுதி மக்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிட்லபாக்கம் ரைசிங் சமூக அமைப்பைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள பெரிய ஏரியை, 30 ஆண்டு காலமாக உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்கவே இல்லை. இதனால் நிலத்தடி நீர்பாதிப்பு, மழையின்போது வெள்ளச்சேதம் ஏற்படுவது போன்றவை வழக்கமாகிவிட்டன. தொடர் போராட்டம், நீதிமன்ற வழக்கு இவற்றால் தற்போது ஏரி சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஏரியில் இருந்த குப்பைகளும் அகற்றப்பட்டன. இந்தக் குப்பைகளை கையாள்வதில் பேரூராட்சிகளில் பல முறைகேடுகள் நடந்ததைஅடுத்து, 3 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஏரியில் தொடர்ந்து குப்பைகளை மலைபோல் குவிப்பதும், புகைபோக்கி மூலம் எரிப்பதும் தொடர்வது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பெயரளவில் ஆய்வு செய்துவிட்டு போயினர். எனவே நீதிமன்றத்தை நாடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x