

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் (28). இவரை கொலை வழக்கு தொடர்பாக கடந்த 20.10.2020-ல் சிப்காட் போலீஸார் கைது செய்தனர். இதுபோல் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ஊர்காவலன் (61) மற்றும் அவரது மகன் பசுபதி பாண்டியன் (20) ஆகிய இருவரையும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கயத்தாறு போலீஸார் கடந்த 22.10.2020 அன்று கைது செய்தனர்.
எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.