Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

உருளைக் கிழங்கு பயிர்களைத் தாக்கும் மர்மநோய் கலக்கத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகள்

கூடலூர் அருகே நடுவட்டம் வுட் புரூக் பகுதியில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட உருளைக் கிழங்கு பயிர்கள்.

கூடலூர்

உருளைக் கிழங்கு பயிர்களை மர்மநோய் தாக்கியுள்ளதால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் மலைக் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இதில் நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பைகாரா, அனுமாபுரம், டிஆர் பஜார், அப்பர் புராஸ்பெக்ட், வுட் புரூக், நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இப்பயிர்களை மர்ம நோய் தாக்கி வருவதால், பயிர்கள் வாடி சுருங்கி வருகின்றன. இன்னும் 30 முதல் 40 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய நிலையில் உள்ள உருளைக் கிழங்கு பயிரையும் நோய் தாக்குவதால் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘ஒருவித வைரஸ் பூச்சியின் தாக்கத்தால் பயிர்கள் கருகி வருகின்றன. இந்த நோய் தாக்குதலால் செலவு செய்த தொகையில் 10 சதவீதம்கூட திரும்பக் கிடைக்காது. மருந்துகள் தெளித்தும் நோய் கட்டுக்குள் வராமல் பரவி வருகிறது. இப்பகுதிகளில் தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜிடம் கேட்டபோது, ‘‘பயிர் கருகல் குறித்து கோவை வேளாண் பல்கலைக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சில பயிர்களை கருகல் நோய் தாக்கியுள்ளது. காலம் தவறி பயிரிடப்பட்டது மற்றும் பனி போன்ற காரணங்களால் பயிர்கள் கருகியுள்ளன. தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x