Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

தீய வாயுக்கள் உமிழ்வு இல்லாத மின் வாகன மின்னேற்றி தொழில்நுட்பம் இந்தியன் ஆயில் நிறுவனம் வெற்றிகரமாக சோதனை

சென்னை

சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வாயுக்கள் உமிழ்வு முற்றிலும் இல்லாமல் மின் வாகனங்களுக்கு மின்சாரம் வழங்கும் நவீன தொழில்நுட்பத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி தொடர்பாக இந்தியன்ஆயில் நிறுவனம் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. நாட்டில் மின் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்கள் உமிழ்வு முற்றிலும் இல்லாமல் சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரம் வழங்கும் அமைப்பை பெங்களூருவில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் அமைத்துள்ளது.

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்புடன் தொடங்கப்பட்ட ஹைஜீ எனர்ஜி என்ற புதிய நிறுவனம் இந்த மின்வாகனங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் நிலையத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இதுபோன்ற மின்னேற்றி நிலையங்களை அமைக்கும்போது, மின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் கட்டமைப்பில் மாற்றம் தேவையில்லை.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (சில்லறை விற்பனை) செயல் இயக்குநர் விக்யான் குமார் கூறும்போது, "அனைத்து வாகனங்களும் மின் பயன்பாட்டுக்கு மாறும்போது ஏற்படும் மின் உள்கட்டமைப்பு மேம்பாடு, திறன் சார்ந்த சவால்களை சமாளிக்க இந்த முறை சிறந்த தீர்வாக இருக்கும்" என்று கூறினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x