Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
நாகப்பட்டினம்: நாகை அருகே கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் பனங்குடியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில்(சிபிசிஎல்) ஆலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலை வளாகத்தில் நேற்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக கோட்டாட்சியர் பழனிகுமார், வட்டாட்சியர் ரமாதேவி, சிபிசிஎல் தொழில்நுட்ப இயக்குநர் சங்கர், முதன்மை பொது மேலாளர் சங்கர், பொது மேலாளர் (ஊழியர் நலன்) தமிழ்முதல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆலை வளாகத்தில் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஆலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளதால், தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை 30 நாட்களிலிருந்து 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 80 பேர் அதிகாரிகளை முற்றுகையிட்டு 3 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் பழனிகுமார், இது தொடர்பாக நவ. 25-ம் தேதி புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதியளித்ததை அடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT