Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

பெரும்புதூர் தொழிற்பேட்டையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளருக்கு பணி வழங்க கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பெரும்புதூர் தொழிற்பேட்டையில் செயல்படும் தொழிற்சாலைகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சிஐடியுதொழிற்சங்கம் சார்பில் நேற்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்படும் அஸாகி, டாங்சன், பாக்ஸ்கான், ஜின்சங் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும பணி வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் அஸாஹி தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 28 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், இரண்டரை ஆண்டுகளாக ஆலையை மூடி வைத்துள்ள டாங்சன் தொழிற்சாலையில் 113 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், ஜின்சங் நிறுவனத்தில் வெளியேற்றப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருங்காட்டுகோட்டை பேருந்து நிறுத்தம் அருகில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலர் இ.முத்துக்குமார், மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலர் பி.ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x