Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

தமிழக குக்கிராமத்திலும் பாஜக இருக்கிறது சேலத்தில் எல்.முருகன் பெருமிதம்

சேலம் குரங்குச்சாவடியில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு பின்னர் வேல் யாத்திரை புறப்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகனை, போலீஸார் கைது செய்தனர்.

சேலம் / நாமக்கல்

தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என கேட்டனர். இன்று தமிழகத்தின் மூலைமுடுக்கு களிலும், குக்கிராமத்திலும் பாஜக இருக்கிறது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சேலம் குரங்குச்சாவடியில் வேல் யாத்திரையையொட்டி, பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன், பொதுச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாவட்ட யாத்திரை பொறுப் பாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். கூட்டத் துக்கு தலைமை வகித்து மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என கேட்டனர். இன்று தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், குக்கிராமத்திலும் பாஜக இருக்கிறது. மாசற்ற தலைவர் பிரதமர் மோடியே அதற்கு காரணம். இளைஞர்கள் பாஜகவை நோக்கி வருவதால் தான் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பேசுகின்றனர்.

முருகக் கடவுளை, அவரைப் போற்றிப் பாடக்கூடிய சஷ்டி கவசத்தை, கருப்பர் கூட்டம் மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க வகையில் பேசினர். அவர்களது பேச்சை தமிழகத்தில் எந்த கட்சியும் கண்டிக்கவில்லை. பாஜக மட்டுமே கண்டித்தது.

பிற மதத்தினரின் பண்டிகை களுக்கு திமுக வாழ்த்து தெரிவிக்கும். ஒரு கோடி இந்துக்கள் திமுகவில் இருக்கின்றனர். ஆனால், அவர்களின் ஓட்டு மட்டும் திமுக-வுக்கு முக்கியம்.

திமுகவுக்கும், கருப்பர் கூட்டத்துக்கும் பாடம் புகட்ட வேண்டும். வரும் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும். பாஜக கை காட்டுபவர் தான் தமிழகத்தின் முதல்வராக முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து வேல் யாத்திரைக்கு புறப்பட முயன்ற எல்.முருகன் உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்ட பாஜக-வினரை போலீஸார் கைது செய்தனர்.

வி.பி.துரைசாமி, அண்ணாமலை கைது

நாமக்கல்லில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பி.முத்துக்குமார் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஆகியோர் பேசினர்.

தடையை மீறி வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய பாஜக துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, அண்ணாமலை மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x