Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வணிகர்களின் குறைகளை அரசு தீர்க்க வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக வணிகர்கள், சிறு- குறு தொழில்புரிவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களின் குறைகளைக் கேட்டு அதைத் தீர்க்க அரசு முன்வர வேண்டும். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு மூடப்பட்ட நிறுவனங்களை கருத்தில்கொண்டு, இதற்கு உடனடி தீர்வு காணும்விதமாக உள்ளாட்சி வரிகளை ரத்து செய்ய வேண்டும்.

பெருநகரங்களில் உள்ள காய்கறி மார்க்கெட் அனைத்திலும் வியாபாரிகள் மீண்டும் தொழில் தொடங்க அனுமதியளிக்க வேண்டும். கரோனா காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்த வணிகர்கள் பலர், கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கடந்த 8 மாதங்களாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, மக்களின் மன அழுத்தம் குறையும் விதமாக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது, பக்தர்கள் பங்கேற்புடன் சுவாமி வீதியுலா நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.

தொழில் மற்றும் வணிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தொழில், வணிகம் சிறக்க மத்திய அரசு உடனடியாக அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்றார்.

பேட்டியின்போது, அமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் ராஜ்குமார், கும்பகோணம் தேர்வு நிலை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்புத் தலைவர் சோழா சி.மகேந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x