Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
பெரம்பலூர்: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று பெரம்பலூர் வந்திருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதிமுக தலைமையிலான அரசை செயல்படாத அரசு என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியில்லை.கூட்டணி குறித்து பேசுவதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவில்லை. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னைக்கு வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். இப்போதும் அந்த கூட்டணி நீடிக்கிறது. தேர்தலுக்கு 4 மாத கால அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவெடுக்கப்படும். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இப்போதே தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டோம் என்றார்.
முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், குன்னம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் பூபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT