Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
ஆம்பூர்: துப்புரவுப் பணியை முறையாக மேற்கொள்ள வலியுறுத்தி ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா 4-வது வார்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக துப்புரவு பணி சரவர மேற்கொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்து வந்தனர்.
ஆனால், நகராட்சி நிர்வாகம் இதுவரை கஸ்பா 4-வது வார்டில் சரிவர துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் துப்புரவுப் பணி மேற்கொள்ளாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் கிடக்கும் குப்பைகளை சேகரித்து நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்து அங்குள்ள குப்பைத்தொட்டியில் நேற்று கொட்டினர்.
இதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கினை கண்டித்து, சுகாதார அலுவலரின் அறைக்கு சென்று முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பகுதியில் துப்புரவுப் பணி தொடர்ந்து மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதனையேற்று, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT