திருப்பத்தூர் அருகே 48 ஆண்டுகளாக பறவைகளுக்காக பட்டாசை தவிர்க்கும் கிராமம்

திருப்பத்தூர் அருகே 48 ஆண்டுகளாக பறவைகளுக்காக பட்டாசை தவிர்க்கும் கிராமம்
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே பறவை களுக்காக 48 ஆண்டுகளாக கிராமமக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். அவர் களைக் கவுரவிக்கும் விதமாக ஆட்சியர் ஜெ.ஜெய காந்தன் இனிப்பு வழங்கிப் பாராட் டினார்.

திருப்பத்தூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேட்டங் குடிப்பட்டி-கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் 17 ஹெக்டேரில் பறவைகள் சரணாலயம் அமைந் துள்ளது. செப்டம்பர், அக்டோபரில் இந்த சரணாலயத்துக்கு பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடு களைச் சேர்ந்த பறவைகள் வரு கின்றன.

குறிப்பாக உண்ணிக்கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்தி நாரை போன்ற 217 வகையான 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் முடிந்ததும் ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்லும். இந்தப் பறவைகளுக்காக கிராமத்தினர் கண்மாய்க்குள் வேட்டைக்காரர்களை அனுமதிப் பதில்லை. பறவை முட்டைகளைச் சேதப்படுத்தும் குரங்குகளையும் கண்காணித்து விரட்டுகின்றனர்.

மேலும் பட்டாசு சத்தம் பறவைகளைப் பாதிக்கும் என்பதால் 1972-ம் ஆண்டு முதல் 48 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை மற்றும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் இக்கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இந்நிலையில் இந்தக் கிராம மக்களைக் கவுரவிக்கும் விதமாக வனத்துறை சார்பில் ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் இனிப்பு வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து வனத் துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த சத்தியபிரியாவுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன், உதவி வனப் பாதுகாவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in