கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே  சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக் லட்சுமணபுரி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத். இவரது மகன் பால் எபினேசர் (22). இவரது நண்பர்கள் பெங்களூரு கத்ரகுப்பே பகுதியைச் சேர்ந்த பாபு (20), புனித்பாபு (18). இவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர். மற்றொரு நண்பரான காட்டன்பேட் பகுதியில் அச்சகத்தில் வேலை செய்யும் லட்சுமணபுரியைச் சேர்ந்த கமலேசன் (19) உள்ளிட்ட 4 பேரும் 2 இருசக்கர வாகனங் களில், சென்னையில் உள்ள பால் எபினேசரின் உறவினர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க நள்ளிரவு 12.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டனர். பால் எபினேசர், பாபு ஆகியோர் ஒரு வாகனத்திலும், புனித்பாபு, கமலேசன் ஆகியோர் மற்றொரு வாகனத்திலும் சென்றனர்.

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரப்பம் அருகே உள்ள வெத்தலைதோட்டம் என்னும் இடத்தில் நேற்று அதிகாலை 2.30மணிக்கு சென்று கொண்டிருந்த போது பால்எபினேசர், பாபு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கந்திக்குப்பம் போலீஸார் 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in