Published : 13 Nov 2020 03:17 AM
Last Updated : 13 Nov 2020 03:17 AM

கொலை, பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடி ஜானி கைது தனிப்படை காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் கொலை, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஜானியை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி என்ற ஜானி பால்ராஜ் (33). கொலை, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர். இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தலைமறைவானார். அதன் பிறகு அவரை பிடிக்க முடியவில்லை.

ஆனால், சர்வதேச இணைய அழைப்புகள் மூலம் வேலூர், காட்பாடி பகுதிகளில் உள்ள முக்கியதொழிலதிபர்களை மிரட்டி லட்சக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டி பறித்து வந்தார். இவரை பிடிக்க முடியாமல் பல நேரங்களில் தனிப் படையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையில், ரவுடி ஜானியை பிடிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் கடந்த மாதம் தனியாக ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் எஸ்பி செல்வகுமார் மற்றும் ஜானியை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் புதிய யுக்திகள் புதிய குழுக்களுடன் புதிய கோணத்தில் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

பெங்களூருவில் கைது

குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன், உதவி ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பெங்களூருவில் பதுங்கி இருந்த ஜானியை நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x