Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

மினி பேருந்து விபத்தில் 15 பேர் படுகாயம்

பர்கூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சத்யவாணி. இவர்கள், தங்களது உறவினர்கள் 23 பேருடன் வாணியம்பாடி அழிஞ்சிகுளத்தில் உள்ள மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் காலை ஒரு மினி பேருந்தில்சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். பேருந்தை கொல்லப் பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் (30) என்பவர் ஓட்டி வந்தார். பர்கூர் அடுத்த எமக்கல்நத்தம் அருகே வந்த போது டயர் வெடித்ததில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 பேர் காயம் அடைந்தனர். பர்கூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அடுத்த பெரியதக்கேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன்கள் யுவராஜ் (24), திலீப் (23). ஓட்டலில் சமையலர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் 2 பேரும், இருசக்கர வாகனத்தில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் யுவராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த திலிப் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x