Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்

விவசாயிகளின் நலனுக்கு எதிரான வேளாண் சட்டம் 2020, மின்சார சட்டம் 2020 ஆகிய சட்டங்களை கொண்டு வந்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், இந்த சட்டங்களை அமல்படுத்தும் முடிவை கைவிடக் கோரியும் பெரம்பலூரில் நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது அலி கோரிக்கையை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் காமராசு , தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் வேணுகோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநிலச் செயலாளர் வீர செங்கோலன், திராவிடர் கழக நிர்வாகி தங்கராசு, எஸ்டிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.சோமையா தலைமை வகித்தார்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூரில்...

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் (மார்க்சிஸ்ட் சார்பு) என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மக்கள் அதிகாரம் பொருளாளர் காளியப்பன் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்(இந்திய கம்யூனிஸ்ட் சார்பு) பா.பாலசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், திமுக விவசாய அணி மாவட்டத் துணைச் செயலாளர் பி.கோவிந்தராஜ் மற்றும் தாளாண்மை உழவர் இயக்கம், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராசன் மற்றும் தமிழக மக்கள் புரட்சிக் கழகம், ஏஐடியுசி, சிஐடியு, மக்கள் விடுதலை, தமிழ்த் தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.

நாகப்பட்டினத்தில்...

அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் சரபோஜி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமிநடராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சம்பந்தம், மாவட்டத் தலைவர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x