Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகள் கால்வாயில் வீச்சு திருப்பத்தூர் காவல் துறையினர் விசாரணை

மதிப்பிழப்பு செய்யப்பட்ட லட்சக் கணக்கான பழைய ரூபாய் நோட்டு களை மர்ம நபர்கள் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கால்வாயில் வீசிச்சென்ற சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும், வெளிநாடு களைச் சேர்ந்தவர்களுக்கு 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள மத்திய அரசு கால அவகாசம் அளித்தது.

இந்நிலையில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் இன்னும் பலரிடம் கோடிக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டில் உள்ள இ.எல்.ராகவனார் தெருவை யொட்டியுள்ள முட்டுச்சந்தில் ஆள்நடமாட்டம் இல்லாத கால்வாய் பகுதியில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட லட்சக்கணக்கான பழைய 500 ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் சிலர் நேற்று வீசிச்சென்றுள்ளனர்.

இதை அவ் வழியாக சென்ற சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவ் வழியாக சென்ற சிலர் கால்வாய் மேற்புறமாக சிதறிக் கிடந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் நகர காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, "மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் சட்டம் உள்ளது.

எனவே, திருப்பத்தூர் பகுதியில் கால்வாய் பகுதியில் லட்சக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகளை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும், பழைய நோட்டுக்களை எடுத்துச் சென்றவர்கள் யாரென்றும் விசாரணை நடத்தி வருகிறோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் பழைய ரூபாய் நோட்டுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றும் கும்பல் உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

விரைவில் உண்மை தெரிய வரும். அதன்பிறகு உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x