அரசு வேலை, ஒப்பந்தப் பணி வாங்கித் தருவதாகக் கூறி விருதுநகரில் 41 பேரிடம் ரூ. 2.73 கோடி முறைகேடு ஒருவர் கைது; மற்றொருவர் தலைமறைவு

அரசு வேலை, ஒப்பந்தப் பணி வாங்கித் தருவதாகக் கூறி விருதுநகரில் 41 பேரிடம் ரூ. 2.73 கோடி முறைகேடு ஒருவர் கைது; மற்றொருவர் தலைமறைவு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், ஒப்பந்தப் பணிகள் எடுத்துத் தருவதாகவும் கூறி 41 பேரிடம் ரூ. 2.73 கோடி முறைகேடு செய்ததாக, திருமங்கலத்தைச் சேர்ந்தவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சாத்தூர் அருகே உள்ள என். மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (41). அரசு பணிகள் ஒப்பந்ததாரராக உள்ளார்.இவருக்கு கடந்த2017-ம் ஆண்டு இருக்கண்குடி இன்ஸ்பெக்டரின் ஜீப் ஓட்டுநர் ராஜபாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

காவலர் ராஜபாண்டி, தற்போது சாத்தூர் டிஎஸ்பியின் ஜீப் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.

காவலர் ராஜபாண்டி, திரு மங்கலத்தில் உள்ள தனது சித்தப்பா மகன் சரவணக்குமார் (45) என்பவர் சென்னையில் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வருவதாகவும், சித்தப்பா திருவள்ளுவன் திருமங்கலம் நகராட்சி அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகவும் கூறி கண்ணனிடம் அறிமுகப்படுத்தினார்.

மேலும், சரவணக்குமார் தனக்கு அனைத்து அதிகாரிகளையும் நன்கு தெரியும் என்றும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசு ஒப்பந்தப் பணிகள் எடுத்து தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய கண்ணன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 41 பேரிடம் அரசு வேலைக்காகவும், ஒப்பந்தப் பணிகளுக்காகவும் ரூ. 2.73 கோடி வரை பணம் பெற்று கொடுத்ததாகக் கூறப்படுகிறது. வங்கி மூலமாகவும், நேரடியாகவும் அந்தப் பணத்தைப் பெற்ற சரவணக்குமார், அரசு வேலை வாங்கிக் கொடுக்காமலும், ஒப்பந்தப் பணிகளை பெற்றுக் கொடுக்காமலும் முறைகேடு செய் துள்ளார்.

இதுகுறித்து, விருதுநகரில் உள்ள மாவட்டக் குற்றப் பிரிவில் கண்ணன் அண்மையில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணக்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும், அவரது தந்தை திருவள்ளுவனைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in