வேலூர் சத்துவாச்சாரியில் பட்டப்பகலில் இறைச்சி கடைக்குள் புகுந்து உரிமையாளருக்கு சரமாரி வெட்டு

வேலூர் சத்துவாச்சாரியில் பட்டப்பகலில்  இறைச்சி கடைக்குள் புகுந்து உரிமையாளருக்கு சரமாரி வெட்டு
Updated on
1 min read

வேலூர் சத்துவாச்சாரியில் பட்டப்பகலில் இறைச்சிக் கடைக்குள் புகுந்து உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகளை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா (38). இவர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் சாதிக் பாஷா நேற்று கடையில் பணியில் இருந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் கடைக்கு வந்துள்ளனர். ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள் என்று கூறிய அவர்கள் திடீரென சாதிக் பாஷாவை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் நிலைகுலைந்த சாதிக் பாஷா அந்த இடத்திலேயே சரிந்தார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சாதிக் பாஷாவை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி காவல் துறை ஆய்வாளர் புனிதா, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தார். அருகில் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் சாதிக் பாஷாவை வெட்டிவிட்டு தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

ஏற்கெனவே சாதிக் பாஷா விடம் ரவுடி வசூர் ராஜா, ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பான புகாரின்பேரில் விசாரணை நடந்து வரும் நிலையில் வசூர் ராஜாவின் கூட்டாளிகளால் சாதிக் பாஷா தாக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தப்பி ஓடிய கும்பலை பிடிக்க வேலூர் கலால் பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in