Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

செய்யாறு அருகே வட்டாட்சியர் வீட்டில் திருட்டு

செய்யாறு அருகே வட்டாட்சியர் வீட்டில் 14 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவர், போளூரில் வட்டாட்சி யராக பணியாற்றி வருகிறார். ஜெயவேல் தனது குடும்பத்துடன் கலசப்பாக்கம் அருகே வசித்து வருகிறார்.

இதனால், பெருங்கட்டூர் கிராமத்தில் உள்ள வீட்டில், அவரது தாயார் கன்னிகா (63) என்பவர் மட்டுமே வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிக் கொண்டு கன்னிகா வெளியூர் சென்று தங்கியுள்ளார். இதற்கிடையில், சொந்த வீட்டுக்கு நேற்று முன் தினம் ஜெயவேல் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டின் பின் கதவு திறந்த நிலையில் இருந்தது. தாழ்ப்பாள் உடைக்கப்படவில்லை. மேலும், அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 14 பவுன் நகைகள் காணவில்லை. வீட்டின் தளத்தில் (மேற்கூரை) பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியை பெயர்த்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த நகைகளை திருடிக்கொண்டு, பின் வாசல் வழியாக சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மோரணம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x