அஞ்செட்டி மலைப்பாதையில் விபத்து தனியார் பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் 60 பேர் காயம்

அஞ்செட்டி அருகே மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் விழுந்த தனியார் பேருந்து.
அஞ்செட்டி அருகே மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் விழுந்த தனியார் பேருந்து.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சொட்டான்ஹள்ளி பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 60 பேர் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அஞ்செட்டியில் நடக்கும் திருமணத்துக்கு தனியார் பேருந்து ஒன்றில் புறப்பட்டனர். இந்த பேருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அஞ்செட்டி அருகே வந்த போது மலைப்பாதையில் உள்ள கொண்டைஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தை நோக்கித் திரும்பி அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த அஞ்செட்டி போலீஸார் விபத்தில் படுகாயமடைந்த பாலக்கோடு சொட்டான்ஹள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி(40), திருப்பதி(23), மாரண்டஹள்ளியைச் சேர்ந்த ஓட்டுநர் திருப்பதி (35) ஆகியோர் உட்பட 10 பேரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லேசான காயமடைந்த சொட்டான்ஹள்ளியைச் சேர்ந்த பிரியங்கா(26), மணிமேகலை(16), ஆர்த்தி(20) உட்பட 50 பேரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அஞ்செட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் படுகாயம் அடைந்து, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in