திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பறிமுதல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடவடிக்கை

திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பறிமுதல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடவடிக்கை
Updated on
1 min read

திருவலம் பேரூராட்சி அலுவலகத் தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. போலி ரசீதுகள் மூலம் சுண்ணாம்பு, பினாயில், முகக்கவசம் வாங்கியது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம் திருவலம் பேரூராட்சியில் கரோனா ஊரடங்கு காலத்தில் போலி ரசீதுகள் மூலம் அரசு நிதியில் முறைகேடு செய்வதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வரப்பெற்றன.

அதேபோல், பேரூராட்சியில் சுண்ணாம்பு, முகக்கசவம், பினாயில் வாங்குவதில் போலி ரசீதுகள் பயன்படுத்துவது, தெரு விளக்குகள் பொருத்துவதில் கையூட்டு பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைகேட்டில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் துரை ஆகியோர் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பேரூராட்சிகளுக் கான பொருட்களை ரசீது எதுவும் இல்லாமல் பணத்தை கொடுத்து வாங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் அரசு அலுவ லர்கள் ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்திலேயே கையூட்டு முறைகேடு புகார்கள் தொடர் பாக திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in