Published : 31 Aug 2022 06:08 AM
Last Updated : 31 Aug 2022 06:08 AM

நேர்மையாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம் : இளம் வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவுரை

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நேற்று நடைபெற்ற வழக்கறிஞர்களுக்கான பதிவு நிகழ்வில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு பார் கவுன்சில் நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர். படம். ம.பிரபு

சென்னை

நேர்மையாக இருப்பதும், கடினமாக உழைப்பதும்தான் வழக்கறிஞர் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ரகசியம் என இளம் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், 800 இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக தங்களை பதிவு செய்யும் நிகழ்வு சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்றார். வழக்கறிஞர் கே.பாலு வழக்கறிஞர்களுக்கான உறுதிமொழியை வாசித்தார். வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் வழக்கறிஞர்கள் பதிவு குறித்து பேசினார்.

இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பங்கேற்று பேசும்போது, "நான் 24 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி அதன்பிறகு நீதிபதியானேன். எனது சீனியர் நான் சேர்ந்தசிறிது காலத்திலேயே நீதிபதியாகிவிட்டார். அதனால் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் தினமும் எவ்வாறு சிறப்பாக தொழில் புரிகின்றனர் என்பதை உற்றுநோக்கி வழக்கறிஞர் தொழிலில் திறமையை வளர்த்துக்கொண்டேன்.

நேர்மையாக இருப்பதும், கடினமாக உழைப்பதும்தான் வழக்கறிஞர் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ரகசியம். நேர்மையாக வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டாலே நன்மதிப்பு கூடிவிடும். வழக்கறிஞர்கள் பலர் வழக்கறிஞர்களாகவும், அதைத்தாண்டி அரசியலிலும், பிற தனியார் நிறுவனங்களிலும் தனியாக முத்திரை பதித்து வருகின்றனர். எந்தத் துறைஎன்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

ஆனால், ஒருபோதும் குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதித்து பெரிய வழக்கறிஞராகி விட வேண்டும் என்று மட்டும் நினைக்காதீர்கள். அந்த எண்ணம் உங்களது நற்பெயரைசீரழித்துவிடும். படிப்படியாக முன்னேற வேண்டும். சட்டப் புத்தகங்களை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். வழக்கு விசாரணைக்கு செல்லும் முன்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்பு திரட்டுகளை தயாரித்து வைத்துக்கொண்டு ஆஜராகுங்கள்.

அதுபோல குற்றவியல் வழக்கறிஞராக தொழிலில் ஜொலிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்துங்கள். அந்த பயிற்சியில் கிடைக்கும் அனுபவம் படித்தாலும் கிடைக்காது. நேரத்தை வீணடிக்கக் கூடாது. உங்களின் பெற்றோர் பெரும் கனவோடு உங்களை வழக்கறிஞர்களாக்கி அழகுபார்த்துள்ளனர். அவர்களுக்காக நீங்கள் உழைத்து முன்னேற வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.

விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், என்.எல்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழத்திப் பேசினர். பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் பதிவு கமிட்டி உறுப்பினர் ஜெ.பிரிஸில்லா பாண்டியன், டி.சரவணன், பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜா குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x