

டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரியை வைகோ நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அளித்த கோரிக்கை மனு:
தமிழகத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இருகூர் - தேவனகொந்தை வரையும், கெயில் நிறுவனம் கொச்சி - கூட்டநாடு வரையும் எண்ணெய், எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளன.
அதேபோல், தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களில் குழாய்களை பதிக்க இருக்கின்றனர். இதனால், விளைநிலங்களும் வாழ்க்கைத்தரமும் பாதிக்கப்படும்.
விவசாயிகளின் எதிர்ப்பை உணர்ந்து, எண்ணெய், எரிவாயு குழாய்களை சாலையோரங்களில் பதிக்க வேண்டும் என்று தீர்மானத்தை அன்றைய தமிழக முதல்வர், கடந்த 2013-ல் நிறைவேற்றினார். இதற்கு முன்பு எத்தனையோ இடங்களில் சாலையோரங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் வசாயிகளின் நலன் கருதி சாலையோரங்களில் குழாய் பதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.