Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM

சேலம் மாவட்டத்தில் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் :

சேலம்

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகள் அமைப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் தெரிவு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து தேர்தலை சந்திக்க தயார்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள்நடைபெற்று, வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களால் வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மொத்தம் 1,451 வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தலைப்போல அல்லாமல், கட்சி சார்ந்த வேட்பாளர்கள் போட்டியிடக் கூடிய தேர்தல் என்பதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடிகளில் பணிபுரிய ஒரு வாக்குச் சாவடிக்கு 4 பேர் வீதம் தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட 5,840 பேர் மற்றும் 20 சதவீதம் கூடுதல் ஊழியர்கள் தெரிவு செய்யப்பட்டு, பட்டியல் தயாராக உள்ளன.

தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்தில் வெளியிடப்பட்டாலும், அதன்படி தேர்தலை நடத்த தயாரான நிலையில், இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x