

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை சென்ட்ரலில் உள்ள புறநகர் ரயில் நிலையத்தில், நேற்று பிபின் ராவத்தின் படத்துக்கு ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே போலீஸார் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரிப்பட்ட பிபின் ராவத்தின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஆனந்த், தெற்கு ரயில்வே தலைமை பாதுகாப்புப் படை ஆணையர் சந்தோஷ் சந்திரன், துணை தலைமை பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன், சென்னை கோட்ட பாதுகாப்புப் படை ஆணையர் செந்தில் குமரேசன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளும், போலீஸாரும், ரயில் பயணிகள் பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சென்னை பெருநகர போலீஸாரும் மலரஞ்சலி செலுத்தினர்.