Published : 10 Dec 2021 03:09 AM
Last Updated : 10 Dec 2021 03:09 AM

கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு - அண்ணாமலையார் கோயிலில் பிராயசித்த பூஜை :

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை என 17 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

மலையே மகேசன் என்பதால், அண்ணாமலை மீது மனிதர்களின் கால் தடம் பதிந்ததையொட்டி, அதற்கு பிராயசித்தமாக, கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்ற பிறகு பிராயசித்த பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டுக்கான பிராயசித்த பூஜை, அண்ணா மலையார் கோயிலில் நேற்று நடைபெற்றது. வேத மந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தினர். பின்னர், மூலவர் சன்னதியை வலம் வந்து, அண்ணாமலை உச்சிக்கு புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அண்ணா மலை உச்சியில் உள்ள சுவாமியின் பாதத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x