Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM
சிலம்பொலி சு.செல்லப்பன் உள்ளிட்ட 6 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தாரிடம் அதற்கான நூல் உரிமைத் தொகையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில், தமிழ் அறிஞர்களான சிலம்பொலி சு.செல்லப்பன், தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, தமிழறிஞர் புலவர் செ.ராசுவின் மருத்துவச் செலவுக்கு உதவும் வகையில், அவரின் நூல்களுக்கான உரிமைத் தொகை ரூ.15 லட்சத்தை அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதேபோல, மறைந்த தமிழறிஞர்கள் சிலம்பொலி சு.செல்லப்பன்,தொ.பரமசிவன் மற்றும் புலவர் இளங்குமரனார் ஆகியோரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம், தமிழறிஞர்கள் முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம் ஆகியோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சம் நூல் உரிமைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT