விடுதலை சிறுத்தை கட்சியினர் மிரட்டல் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கறிஞர் வழக்கு : டிஜிபி பதிலளிக்க உத்தரவு

விடுதலை சிறுத்தை கட்சியினர் மிரட்டல் -  போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கறிஞர் வழக்கு :  டிஜிபி பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

விடுதலை சிறுத்தை கட்சியினர் தொடர்ந்து மிரட்டி வருவதால் போலீஸ் பாதுகாப்பும், துப்பாக்கி உரிமமும் கேட்டு மூத்த வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் பி.ரத்தினம்(74), உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்படும் ஆதிதிராவிட சமூக மக்களுக்காகவும், மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் கொலை வழக்கு, சென்னகரம்பட்டி கொலை வழக்கு, கடலூர் கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை வழக்கு உட்பட பல்வேறு முக்கியமான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை கிடைக்க காரணமாக இருந்துள்ளேன்.

இந்த வழக்குகளால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என் மீது கடும் கோபமடைந்தனர். பொதுச் செயலர் திருமாவளவன், துணைப் பொதுச் செயலர் வன்னியரசு ஆகியோருக்கு எதிராகப் பல்வேறு புகார்களை தெரிவித்தேன். இதனால் அவர்களின் தூண்டுதல் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என்னை தொடர்ந்து மிரட்டியும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியும் வருகின்றனர்.

இதனால் எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் 29.11.2019-ல் மனு அளித்தேன். ஆனால் எனக்கு கொலை மிரட்டல் இல்லை என்று கூறி போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி மறுத்துவிட்டார். எனக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், துப்பாக்கி உரிமம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, உள்துறை செயலர், டிஜிபி பதில் அளிக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in