சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1942-க்கு விற்பனை : விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1942-க்கு விற்பனை :  விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Updated on
1 min read

சத்தியமங்கலம் மலர் சந்தையில் கடந்த ஒரு வாரமாக மல்லிகை விலை ரூ.1000-த்தைக் கடந்து உச்சத்தில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மலர் சாகுபடி நடந்து வருகிறது.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மட்டுமல்லாது, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் அனுப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது இதனால் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் வரத்து குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது. திருமண முகூர்த்த காலம் என்பதால், கடந்த ஒரு வாரமாக மல்லிகை விலை கிலோ ரூ.1000-த்தைக் கடந்து விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் மலர் சந்தையில் கடந்த இரு நாட்களாக மல்லிகை கிலோ ரூ.1900-க்கு விற்பனையாகிறது. நேற்றைய மலர்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1942- க்கு விற்பனையானது.

இதேபோல், காக்கடா கிலோ ரூ.850, சாதி முல்லை ரூ.750, கனகாம்பரம் ரூ.1165, முல்லை ரூ.940, செண்டு மல்லி ரூ.130, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி கிலோ ரூ.80-க்கும் விற்பனையானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in