Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM
புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில்,‘ மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழர் ஆணையரகம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நேற்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜன. 12-ம் தேதி `புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, ஜன. 12, 13-ம் தேதிகளில் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள் விழா, `தமிழால் இணைவோம்' என்ற பெயரில் சென்னையில் கொண்டாடப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விவரங்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த இணையதளம் மூலம் புலம் பெயர் தமிழர்களுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளலாம்.
வெளிநாடுகளில் வசிப்போர் தாங்கள் பிறந்த கிராமத்தின் மேம்பாட்டுக்காக ஏதேனும் செய்ய விரும்பினால், அவர்கள் பெயரிலேயே அந்த நலத்திட்டங்கள் செய்யப்படும். வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட பணிக்காக செல்வோர், அங்கு வேறு பணிகளில் அமர்த்தப்படும் நிலை உள்ளது.
எனவே, அவர்கள் பணி தொடர்பாக தமிழக அரசிடம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாடு செல்ல விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT