

தமிழக மின்வாரியத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதுவரை இப்பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து புதிய அறிவிப்பை வெளியிட மின்வாரியம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், மின்வாரியத்தில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக, சமூகவலைதளங்களில் போலியாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதை நம்பி, பலர் கட்டணம் செலுத்தி ஏமாந்து வருகின்றனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘மின்வாரியத்தில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதுகுறித்த அறிவிப்பு முறைப்படி நாளிதழ்கள் மற்றும் மின்வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, இதுபோன்ற போலி விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்’’ என்றனர்.