Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட - நெல்லை, பாளை. பேருந்து நிலையங்கள் இன்று திறப்பு : சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வர் திறந்து வைக்கிறார்

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேய்ந்தான்குளம் அருகே 4 நடைமேடைகளுடன் அமைந்திரு ந்த புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத் தளம், முதல்தளம் என்று வணிக வளாகம் போன்று கடைகளும் கட்டப்பட்டுள்ளன. டிஜிட்டல் வடிவ பிரம்மாண்ட திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பேருந்து நிலையத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இதுபோல பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ரூ.14 கோடியில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வணிக வளாகம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே இடதுபுறத்தில் செயல்பட்டுவந்த வாகன காப்பகம் போதிய இடவசதி இல்லாமல் இருந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.6.5 கோடியில் 3 அடுக்கு இருசக்கர வாகன காப்பகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், இருசக்கர வாகன காப்பகத்துடன் புதிய பேருந்து நிலையத்தின்முன் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப பூங்கா ஆகிய வற்றை சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதை யொட்டி பேருந்து நிலையங்களில் ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கும் பணியை திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குட்டி தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x