Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

கனமழைக்கு சேதமடைந்த - அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் : குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

நெற்பயிர்களை போன்று கனமழைக்கு சேதமடைந்த இதர பயிர்களையும் கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடை பெற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவ சாயிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சுரேஷ், வேளாண் அலுவலர் ஷோபனா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சேதமடைந்துள்ள மற்ற பயிர் களையும் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கோமாரி நோயில் இருந்து கால் நடைகளை பாதுகாக்க ஆண்டுக்கு 2 முறை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திப்படுகிறது. அதன் எண்ணிக்கையை 3-ஆக உயர்த்த வேண்டும். ஏரிகளில் மீன் வளர்க்க அனுமதி வழங்க வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளதால், ஏரியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். நீர்ப் பிடிப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, உடனடியாக மாற்று இடம் கொடுத்த பிறகு, அவர்களை வெளியேற்ற வேண்டும். நாயுடுமங்கலம் – ஆர்ப்பாக்கம் இடையே சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. அப்பணியில் பொற்குணம் பகுதியில் ஒரு கி.மீ., தொலைவுக்கு பணிகள் நடைபெறாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தடைப் பட்டுள்ள பணியை முடிக்க வேண்டும். நீர்வரத்துக் கால்வாய் களை தூர் வார வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x