Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM

மதுரையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை :

தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் நேற்று கிலோ ரூ.100-ஐ தொட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை நடப்பாண்டு மிக தீவிரமாக பெய்து வருவதால் தமிழகம் முழுவதும் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளில் காய்த்து அறுவடைக்கு தயாரான காய்கறிகளும் அழுகின. அதனால், சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து 50 சதவீதத்துக்கும் கீழ் குறைந்ததால் அதன் விலை கடுமையாக உயர்ந்தது.

ஆரம்பத்தில் தக்காளி விலை மட்டும் உயர்ந்தது. அதன் பிறகு மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன. இடையில் ஒரு வாரம் தக்காளி விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தொட்டது.

இதுகுறித்து மதுரை காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது: கத்தரிக்காய் கிலோ ரூ.90 முதல் ரூ.100, வெண்டைக்காய் ரூ.60 முதல் ரூ.80, சுரைக்காய் ரூ.50, புடலங்காய் ரூ.70 முதல் ரூ.80, அவரை ரூ.80, பட்டை அவரை ரூ.110, மொச்சை ரூ.60, வெள்ளரி ரூ.40, பாகற்காய் ரூ.60 முதல் ரூ.80, பாகற்காய் சிறியது ரூ.100 முதல் ரூ.180 உட்பட அனைத்து காய்கறிகள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மழை நின்று காய்கறிகள் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். முகூர்த்த நாட்களில் இன்னும் கடுமையாக விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x