

தமிழக முன்னாள் ஆளுநரும் ஒருங் கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வ ராகவும் பணியாற்றிய கே.ரோசய்யா, நேற்று ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 88. இவ ரது மறைவைத் தொடர்ந்து தெலங்கானா அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ஆளுநர், முதல்வர், அமைச்சர் என பல பதவிகளை வகித்தவருமான கே.ரோசய்யா ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்தது. உடனடியாக அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அவரது வீட்டிலேயே பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள், தெலங்கானா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, ரோசய்யா குறித்து பேசிய மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ், "தெலுங்கு மாநிலங்களுக்கு ரோசய்யா ஆற்றிய தொண்டு இன்றியமையாதது. 15 முறை நிதி அமைச்சராக நிதி அறிக்கையை தாக்கல் செய்து சாதனை புரிந்தவர். அவரது மறைவுக்கு 3 நாட்கள் வரை மாநில அரசு துக்கம் அனுசரிக்கும்" என்றார்.
ரோசய்யாவின் உடல், இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள காந்தி பவனில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர், மதியம் 12.30 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தேவர மஞ்சில் உள்ள பண்ணை வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி, சோனியா இரங்கல்
இதேபோன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத், நடிகர் சிரஞ்சீவி, சாரதா பீடாதிபதி சிவரூபானானேதிர சுவாமிகள் என பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
வாழ்க்கை குறிப்பு
பின்னர் 2010 நவம்பர் 24-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து 2011 ஆகஸ்ட் 31 முதல் 2016 ஆகஸ்ட் 30 வரை தமிழக ஆளுநராக ரோசய்யா பதவி வகித்தார்.