Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

ஏற்காடு - குப்பனூர் சாலையில் மண் சரிவு சீரமைப்பு பணி தீவிரம் :

சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு செல்லும் குப்பனூர் சாலையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்காடு - குப்பனூர் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை பழுதடைந்தது. இதனால், அந்த சாலையில் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1-ம் தேதி ஏற்காடு குப்பனூரில் இருந்து கொட்டச்சேடு செல்லும் தார் சாலையில் விரிசல் ஏற்பட்டது. அதேபோல, சில இடங்களில் மண் சரிவால் சாலை பழுதடைந்துள்ளது. நேற்று (3-ம் தேதி) நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை விரிசல் உள்ள பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து, பழுது சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாலை சீரமைப்புப் பணியை முன்னிட்டு இரண்டு சக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x