Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற அழைப்பு :

ஈரோட்டில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை 20 ஆயிரத்து 978 அட்டைகள் பதிவு செய்யப்பட்டு, 12 ஆயிரத்து 79 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, நீல நிற மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவரும் உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். வங்கி கடனுதவி வேண்டி விண்ணப்பித்துள்ள, தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் இதுவரை நடந்த சிறப்பு முகாம்கள் மூலம், 8341 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர். நம்பியூர், பெருந்துறை, அம்மாபேட்டை, கோபி, சென்னிமலை, ஈரோடு ஆகிய ஒன்றியங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் நகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அரசு ஆணையிட்டுள்ளது, என்றார்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் எம்.ராமகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x