Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

103 பவுன் நகை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது :

பெரம்பலூரில் நகைக்கடை நடத்தி வந்த கருப்பண்ணன்(65) என்பவர், கடந்த நவ.26-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, முகமூடி அணிந்த 3 பேர் வீட்டுக்குள் புகுந்து, கருப்பண்ணனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த 103 பவுன் நகைகள், 9 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக, 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய பெரம்பலூர் போலீஸார், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அரும்பாவூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமார்(36), திருச்சியைச் சேர்ந்த சிட்டிபாபு மகன் ஆனந்தன்(46) மற்றும் திருடிய பொருட்களை மறைத்து வைத்திருந்த செந்தில்குமாரின் தாய் ராஜேஸ்வரி(58), 2-வது மனைவி மஞ்சு(34) ஆகியோரை டிச.1-ம் தேதி கைது செய்தனர். இவர்களிடமிருந்து 16 பவுன் நகைகள், 2.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொருவரான பெரம்பலூர் சங்குப்பேட்டை கம்பன் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார்(25) என்பவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x