Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,500 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 13-ம் தேதி எட்டியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,500 கனஅடியாக இருந்தது. அணை மின்நிலையங்கள் வழியாக 17 ஆயிரம் கனஅடியும், உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக 3 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று நீர்வரத்து விநாடிக்கு 18,500 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகு வழியாக நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. அணை மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT