Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM

திருச்செங்கோட்டில் தொடர் மழையால் - குண்டும் குழியுமான சாலையால் அவதி கொல்லப்பட்டி சாலையை சீரமைக்கக் கோரிக்கை :

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பட்டி - ஈரோடு சாலையை இணைக்கும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

திருச்செங்கோடு நகராட்சி 30-வது வார்டு கொல்லப்பட்டி பாலிக்காட்டில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் உள்ளன. பாலிக்காடு வழியாக செல்லும் சாலை கொல்லப்பட்டி - ஈரோடு சாலையை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் உள்ளது.

திருச்செங்கோட்டில் நடை பெறும் ஓங்காளியம்மன் கோயில் திருவிழா காலங்களில் ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு வரும் வாகனங்கள் கொல்லப்பட்டி சாலையில் திருப்பி விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கொல்லப்பட்டி சாலை உரிய பராமரிப்பின்மையால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சாலையின் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், விவசாயிகளும் வாகனங்களில் விளை பொருட்களை எடுத்துச் செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு வேளையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில சிக்கும் அபாயமும் நிலவுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதனை நகராட்சி நிர்வாகத்தினர் கவனத்தில் கொண்டு பழுதடைந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x