Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM

குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் படித்து - உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்று, நடப்பாண்டில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஈரோடு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்று, அதன் தொடர்ச்சியாக அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து, தற்போது உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அரசின் சார்பில் மாதம் ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான தகுதி உள்ள மாணவர்கள், விண்ணப்பங்களை ஒரு வாரத்துக்குள், ‘தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 6-வது தளம், ஈரோடு 638011’ என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதேபோல், தற்போது செயல்பாட்டில் உள்ள 15 தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட மையங்களின் பயிற்றுநர்கள், எழுத்தர்கள் அல்லது தொழிற்கல்வி பயிற்றுநர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x