Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM

பெரம்பலூரில் : பலத்த மழையால் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு :

பெரம்பலூரில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் புதை சாக்கடைகள் நிரம்பி மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

துறையூர்- பெரம்பலூர் சாலையில் பாளையம் கிராமம் அருகே பாலம் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலையின் பெரும்பகுதி மழைநீரில் அரித்துச் செல்லப்பட்டதால், துறையூர் சாலையில் இருசக்கர வாகனங்கள் தவிர, இதர வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

குரும்பாபாளையம், தெற்கு மாதவி, லாடபுரம், பனங்கூர், சிறுகன்பூர் உட்பட பல்வேறு கிராமங்களில் குயிருப்புகளில் மழைநீர் புகுந்தது. தொடர் மழை காரணமாக நேற்று நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் 60 ஏரிகள் நிரம்பின. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,072 நீர்நிலைகளில் 321 நீர்நிலைகள் நிரம்பின. மாவட்டத்தில் நேற்று காலைவரை பெய்த மழையளவு(மில்லி மீட்டரில்): லப்பைக்குடிகாடு 109, அகரம் சீகூர் 100, புதுவேட்டக்குடி, எறையூர் தலா 83, பாடாலூர் 75, பெரம்பலூர் 72, வேப்பந்தட்டை 55, தழுதாளை 52, செட்டிக்குளம் 50, வி.களத்தூர் 45, கிருஷ்ணாபுரம் 20.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x