Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM

அதிமுக ஆட்சியில் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு : பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருவண்ணாமலை

அதிமுக ஆட்சியில் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டி உள்ளார்.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் 615 பேருக்கு ரூ.8,03,81,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய கட்டிடங் களை திறந்து வைக்கும் விழா தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “அம்பேத்கர் தலைமையிலான குழுவினர் மூலமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட நாள் இன்று. அக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த காயிதே மில்லத் இடம் பெற்றிருந்தது நமக்கு பெருமை. இந்நிலையில், இட ஒதுக்கீடு சட்டத்துக்கு நீதிமன்றம் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தந்தை பெரியார், தமிழகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக அரசு பணியில், இப்போது நம் வீட்டு பிள்ளைகள் பணியாற்றுகின்றனர்.

வீட்டு மனை பட்டா, உதவி தொகை வழங்குவதில் திருவண்ணாமலை மாவட்டம் முன்னிலை பெற்ற மாவட்டமாக இருக்க வேண்டும். வீட்டு மனை பட்டா வழங்கிய மறுநாளே, அரசு பதிவேட்டில் ஏற்ற வேண்டும். இல்லையெனில், ஒரே இடத்தை 2 நபருக்கு பட்டா கொடுக்கக்கூடிய நிலை ஏற்படும். கடந்த திமுக ஆட்சியில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ கொண்டு வரப்பட்டு, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 21 லட்சம் கூரை வீடுகள், கான்கிரீட் வீடுகளாக மாற்றம் செய்யப்பட இருந்தது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, பட்டியல் முடக்கப்பட்டது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியானவரை கண்டறிந்து வீடு வழங்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் வீடு வழங்கும் திட்டத் தில், கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆன்லைன் பதிவில் உள்ள பட்டியலில் தகுதி இல்லாத வர்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அப்போது பதவியில் இருந்த அதிகாரிகள் தவறு செய்துள்ளனர். முறையற்ற வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளை தள்ளுபடி செய்ய வேண்டும். முறைகேடாக சேர்க் கப்பட்டுள்ள பெயர்களை நீக்க கூடுதல் ஆட்சியர் பிரதாப் நட வடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்பிவிட்டோம், எதுவும் செய்ய முடியாது என கூறுவதை தவிர்க்க வேண்டும். மக்களுக்காகத்தான் திட்டம்” என்றார்.

முன்னதாக, இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட வருவாய் அலு வலர் முத்துகுமாரசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x