Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM
தொடர்மழை காரணமாக புதுவையில் காய்கறிகளின் விலை கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தில் இருந்தது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுவை என தென்மாநிலம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்தது. புதுவைக்கு நாளொன்றுக்கு 50 டன் வெங்காயம், 20 டன் தக்காளி தேவைப்படுகிறது. மற்ற காய்கறிகளுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு 300 டன் காய்கறி புதுவைக்கு வரும். ஆனால் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்தது. ரூ.10-க்கு விற்ற தக்காளி, மழைக்குப் பிறகு ஒரு கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்பட்டது. வெங்காயம், உருளை, கேரட், பீட்ரூட் போன்ற அனைத்து காய்கறிகள் விலையும் 3 மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.
தற்போது மழை குறைந்துள்ள துடன் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி தற்போது ஒரு கிலோ ரூ.65-க்கு விற்கிறது. இதேபோல் மற்ற காய்கறிகளும் ரூ.10 வரை விலை குறைந்துள்ளது.
விலை விவரம்:
வெங்காயம்-35, உருளை-40, வெள்ளரி-20, கேரட்-65, பீட்ரூட்-40, மாங்காய்-50, பீனஸ்-70, முள்ளங்கி-50, கோஸ்-35, சாம்பார் வெங்காயம்-55, பாகற்காய்-60, முருங்கைக்காய்-120, கத்தரிக்காய்-70, சேப்பங்கிழங்கு-35-க்கு விற்பனையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT